குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை


குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 April 2023 10:45 PM GMT (Updated: 25 April 2023 10:45 PM GMT)

குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் மகன்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

காஞ்சிபுரம்

வெட்டிக்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஷ் (வயது 29). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (22) இருவரும் அதீசிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அதீஷ் அங்கிருந்த மேம்பாலத்தின் மீது தப்பி ஓடினார். அப்போது விரட்டி சென்ற இருவரும் அதீசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். அப்போது அதீசின் அண்ணன்களான முரளி (33), சுகுமார் (38) இருவரும் தடுக்க வரும்போது அவர்களையும் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் சரண்

இந்த சம்பவத்திற்கு காரணமான அதீசின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகியோரை தீவிரமாக தேடினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

சுகாஷ், சுனில் இருவரும் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றனர். தாத்தா தங்கமணியிடம் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் சுகாசும், சுனிலும் சேர்ந்து அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இரவு வீட்டுக்கு வந்த அதீசிடம் இதுகுறித்து தங்கமணி கூறிய நிலையில் தாத்தாவை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கத்தியை எடுத்து வந்து சித்தப்பாவான அதீசை ஓட, ஓட விரட்டி கொலை செய்ததும் தடுக்க வந்த 2 சித்தப்பாக்களையும் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சுகாஷ், சுனில் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story