விடிய, விடிய கிரிவலம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

பவுர்ணமி நேற்று மாலை 4.35 மணி வரை இருந்ததால் பக்தர்கள் இரவு வரை தொடர்ந்து கிரிவலம் சென்றனர். அப்போது பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


Next Story