அலுவலகத்துக்கு கைலி-டவுசர் அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அதிகாரி


அலுவலகத்துக்கு கைலி-டவுசர் அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அதிகாரி
x

அலுவலகத்துக்கு கைலி-டவுசர் அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அதிகாரி

தஞ்சாவூர்

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் அலுவலகத்துக்கு கைலி, டவுசர், நைட்டி அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அதிகாரி தற்காலிகமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைலி-டவுசர் அணிந்து வர தடை

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்னாள் விமானப்படை வீரரான கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர், கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வரும் ஆண்கள் கைலி, டவுசர் அணிந்த வரக்கூடாது, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தார்.

சமூக வலைதளங்களில் பரவியது

மேலும் கைலி அணிந்து வருபவர்களை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் உள்ளே விட மறுப்பதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் விவசாயி ஒருவர், தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அந்த அலுவலகத்துக்கு சென்று உள்ளார்.

அப்போது அவர் கைலி அணிந்து இருந்ததால், அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியிலேயே காக்க வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

எந்த விதத்தில் நியாயம்?

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், செங்கிப்பட்டியை சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள் தான் அதிகம் உள்ளனர்.

வயலில் வேலை செய்ய கைலி, டவுசர் போன்ற ஆடை அணிந்துதான் வேலைக்கு செல்வார்கள். அவசரமாக சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், கைலியுடன் தான் செல்ல வேண்டி உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கைலி அணிந்து வரக்கூடாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்றனர்.

பணியில் இருந்து விடுவிப்பு

இது குறித்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) பழனிவேல் கூறுகையில், கிராம நிர்வாக அதிகாரி கரிகாலன் மீது புகார்கள் எழுந்ததையடுத்து அவர் மீதான விசாரணைக்கு பிறகு அவரை வேறு வருவாய் கோட்டத்திற்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை தற்காலிகமாக பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story