ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்ட கிராம மக்கள்


ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்ட கிராம மக்கள்
x

மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, மீனாட்சிபுரம், வினோபாஜிநகர், காந்திபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பாத்தியப்பட்ட மயானம், அய்யம்பாளையம்-பட்டிவீரன்பட்டி மெயின் ரோட்டில் உள்ளது. இதன் அருகே ஓடை செல்கிறது.

இந்தநிலையில் மயானம், ஓடை ஆகியவை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இதனால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்த போதிய இடமின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 5 கிராம மக்கள் தேவரப்பன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிமாரிமுத்துவிடம், மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை சீரமைத்து தரக்கோரி மனு கொடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story