கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்


கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சம்பளம் வழங்கக்கோரி கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சம்பளம் வழங்கக்கோரி கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மானூர் யூனியன் பல்லிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமடை கிராம மக்கள், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

ஊதியம் வழங்க கோரிக்கை

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பல்லிக்கோட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் வசிக்கும் பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலையின் மூலமாக பிழைப்பு நடத்துகின்றனர். இந்த கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை. அதிகபட்சம் 40 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதிலும் சம்பளமும் முறையாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.

கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான சம்பள தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே சம்பளத்தை உடனே வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

செவிலியர்கள்

கொரோனா காலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள், உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி தங்களுக்கு மீண்டும் நிரந்தர செவிலியர் வேலை வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தைச் சேர்ந்த வேணி என்பவர் தனது வீட்டை சுற்றி வேலி அமைக்க விடாமல் தடுக்கும் பெண் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

தென்காசி மாவட்டம் வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்த அமிபால சஞ்சீவன், தன்மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மீதும், முறையாக விசாரணை செய்யாமல் அவதூறாக பேசிய போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் என்னை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story