விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு - மீட்கப்பட்ட 7 பெண்களிடம் மனநல மருத்துவரை வைத்து வாக்குமூலம் பெற்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்
ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 7 பெண்களிடம் இன்று மனநல மருத்துவரை வைத்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரமம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 7 பெண்களிடம் இன்று மனநல மருத்துவரை வைத்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.