கொட்டி தீர்த்த கன மழை விழுப்புரம் பஸ்நிலையம் குளமாக மாறியது


கொட்டி தீர்த்த கன மழை    விழுப்புரம் பஸ்நிலையம் குளமாக மாறியது
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் விழுப்புரம் பஸ்நிலையம் குளம் போன்று மாறியது.

விழுப்புரம்


விழுப்புரம், டிச.13-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பரவலாக மழை பெய்த நிலையில், இரவிலும் பல இடங்களில் கனமழை பெய்தது. காலையிலும் ஆங்காங்கே மழை பெய்ததால், மாணவ- மாணவிகளின் நலனை கருதி முன்எச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது.

இடி-மின்னலுடன் பலத்த மழை

தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மேல் விழுப்புரம் பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் மாலை 2.30 மணியளவில் இடி- மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை, ½ மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

குளமான பஸ்நிலையம்

மேலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர், குளம்போல் தேங்கியதால் பயணிகள் சிரமப்பட்டனர். அதுபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதன் பின்னர் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தனர். இதேபோல் மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம், செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பிறகும் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

மரக்காணம்- 68, விழுப்புரம்- 26, செஞ்சி- 17, முண்டியம்பாக்கம்- 13.20, நேமூர்- 11, திருவெண்ணெய்நல்லூர்- 9, அனந்தபுரம்- 9, கஞ்சனூர்- 8.50,வளத்தி- 8.20, கெடார்- 6, சூரப்பட்டு- 6, செம்மேடு- 5.20, கோலியனூர்- 3, அரசூர்- 3, திண்டிவனம்- 2, வளவனூர்- 2, அவலூர்பேட்டை- 1.


Next Story