ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்க வேண்டும்


ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்க வேண்டும்
x

ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை மூலம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நவம்பர் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்களிடையே ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கக்கூடிய வழிமுறைகள், இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல், தன் சுத்தம், கை கழுவுதல் போன்ற விழிப்புணர்வை வீடு, வீடாக சென்று களஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கூடும் இடங்களில் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், தெருநாடகம், பொம்மலாட்டம், வாகன பிரசாரம், கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து

அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இரும்புச்சத்து திரவத்தை ஒரு மில்லி வீதம் வாரம் இருமுறை திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் மதிய உணவிற்கு பின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும், வளர்இளம் பெண்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை ஒவ்வொரு வியாழன்தோறும் தவறாமல் வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து ஊட்டச்சத்து வழங்க தேவையான, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 269 வட்டார வளமைய உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கக்கூடிய வழிமுறைகள், இரும்புச்சத்து உணவு உட்கொள்ளுதல் குறித்து விரிவாக பயிற்சி அளித்து எடுத்துக்கூறி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்க அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story