விருதுநகர்: உணவகத்தில் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழப்பு


விருதுநகர்: உணவகத்தில் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 23 Aug 2022 9:25 AM GMT (Updated: 23 Aug 2022 9:56 AM GMT)

விருதுநகர் அருகே உணவகத்தில் குளிர்பானம் குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திண்டிவனம்,

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ். இவரது மனைவி, மகன் ஆண்டனி ஜான் (வயது 14) மற்றும் மகள் ஏஞ்சலின் இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தனர். திருவிழா முடிந்த பின்னர் நேற்று இரவு அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஆண்டனி ஜானுக்கு அவரது அம்மா குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த பின்னர் சிறுவன் ஆண்டனி ஜான் 4-5 முறை வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்னர் பஸ்சில் ஏறி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

பஸ் திண்டிவனம் அருகே வந்த போது ஆண்டனி ஜானை அவரது அம்மா எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அவர் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சில் இருந்தவர்கள் சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸ் வந்த உடன் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story