விஷூ பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவை
கோவையில் மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விஷூ பண்டிகை
அறுவடை விழாவாக கொண்டாடப்படும் சித்திரை விஷூ பண்டிகை மலையாள மொழி பேசும் மக்களால் கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐஸ்வரியம் பெருகவும், செல்வம் செழிக்கவும், கிடைத்த செல்வம் நிலைக்கவும் வேண்டி கோவில்கள், வீடுகளில் விஷூ கனி கண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது குடும்பத்தினர்களுக்கு வீட்டில் உள்ள முதியவர்கள் புத்தம் புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை கை நீட்டமாக வழங்கினார்கள்
கனி காணும் நிகழ்ச்சி
விஷூ பண்டிகையையொட்டி கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கனி கண்டு வழிபாடு நடத்துவார்கள். மேலும் வீடுகளிலும் கிருஷ்ணர் படத்தை அலங்கரித்து மலர் மாலை அணிவித்து புத்தாடை, கண்ணாடி, காய்கறி, பழங்கள், கனிக்கொன்றை பூக்களை வைத்து கனி காணும் நிகழ்ச்சி நடத்தினர்.
சித்தாபுதூரில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் சாமி தரிசனம்
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கை நீட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று எட்டிமடை, மதுக்கரை, ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கணபதி, ராம்நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்களது புத்தாண்டான விஷூ பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.






