தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்


தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக  வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்  புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:45 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,485 வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. முகாம்களில் ஏராளமான புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த ஆணையிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 878 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகளிலும் நேற்று 2- வது நாளாக வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களில் தகுதியான நபர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றம் செய்ய விரும்பியவர்கள் அதற்கான படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.

புதிய வாக்காளர்கள்

மேலும் ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6-பி-ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். குறிப்பாக புதிய வாக்காளர்கள் ஏராளமானவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வழங்கினர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,485 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி பள்ளி மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்களுக்கு அதற்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் அல்லது இணையதள முகவரி மூலமாகவும் விண்ணபிக்கலாம் என்றார். இந்த ஆய்வின்போது தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார், தாசில்தார் ராஜராஜன், தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story