வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, வைகை கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story