தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்


தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 11:55 AM GMT)

உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கக்கோரி தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி திராவிடசெல்வி, கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி காந்திமதி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவில் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திராவிடசெல்வி கூறுகையில், ''எனது கணவர் ராஜ்குமாரின் கல்லீரல் செயல் இழந்து விட்டது. எனவே எனது கல்லீரலை கணவருக்கு வழங்குவதற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்'' என்றார்.

இதேபோன்று காந்திமதி கூறுகையில், ''எனது மகள் மாரீசுவரிக்கு (23) சிறுநீரகம் செயலிழந்ததால், எனது சிறுநீரகங்களில் ஒன்றை அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்துவதற்கு உதவி கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும்'' என்றார்.

மேலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்க கோரி, கடந்த சில நாட்களாக தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கும் வந்தும், உதவி கலெக்டரை சந்திக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story