பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு


பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு
x

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது 45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரனுக்கும்(41) இடையே கடந்த 2020-ம் ஆண்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில் செல்லத்துரையை அரும்பாவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஸ்கரன் அப்போது அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து செல்லத்துரை நிபந்தனை ஜாமீனில் 17.6.2020 அன்று வெளியே வந்தார். மேலும் அன்று மாலை அவர் பெரியம்மாபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பாஸ்கரன் முன்விரோதம் காரணமாக கொடுவாளால் செல்லத்துரையை வெட்டியுள்ளார். மேலும் அருண்குமார் என்பவர் உருட்டு கட்டையால் செல்லத்துரையை தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த செல்லத்துரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக செல்லத்துரை அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக செல்லத்துரை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மனுதாரர் செல்லத்துரைக்கு சாட்சியம் அளிக்க அப்போதைய அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவுக்கு 27.6.2022 அன்றும், 8.7.2022 அன்றும், 18.7.2022 அன்றும், நேற்றும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து 4 முறையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா கோர்ட்டில் ஆஜராகாததால் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி பிணையில் விடுவிக்கக்கூடிய வாரண்டை பிறப்பித்தும், வருகிற 1-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். கலா தற்போது கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story