குடிநீர் வசதி, கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை


குடிநீர் வசதி, கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை
x

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் வசதி, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் வசதி, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

பிரார்த்தனை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்கா புகழ்பெற்ற புண்ணிய தலமாக விளங்கி வருகிறது. இந்த தர்காவில் மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் சகீது பாதுஷா நாயகம் அடக்கமாகி உள்ளார். இந்த தர்காவுக்கு முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏர்வாடி தர்காவில் இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. நேற்று கொடியேற்றமும், வருகிற 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழாவும் நடக்க உள்ளது.

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பஸ்களை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்கவும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், பொதுமக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தவும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

இதில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர், கீழக்கரை தாசில்தார் சரவணன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Next Story