பழவாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்


பழவாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Oct 2023 7:00 PM GMT (Updated: 20 Oct 2023 7:00 PM GMT)

மணல்மேடு அருகே பழவாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு:-

மணல்மேடு அருகே பழவாற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பழவாறு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் பழவாறு செல்கிறது. இந்த ஆறு, வரக்கடை, பாக்கம், காவளமேடு, கொற்கை, தாழஞ்சேரி, நாராயணமங்கலம், வில்லியநல்லூர், மேலாநல்லூர், நடராஜபுரம், பட்டவர்த்தி வழியாக சீர்காழி வரை சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.

மேலும் இந்த ஆறு மழைநீர் வடிகாலாகவும், நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் மணல்மேடு அருகே உச்சிதமங்கலம் என்ற கிராமத்தில் பழவாற்றில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடக்கிறது.

விவசாயிகள் கவலை

ஆற்றில் தண்ணீர் இருப்பது கூட தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள் வளர்ந்து கிடப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதிலும் தடை ஏற்படுகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால், பழவாற்றில் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்படும். இதனால் மேற்கண்ட கிராமங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள். எனவே உச்சிதமங்கலம் பகுதியில் செல்லும் பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story