முல்லைப் பெரியாறு அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு


முல்லைப் பெரியாறு அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
x

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை தமிழக விவசாயத்திற்கும் குடிநீருக்கும் அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்துவைத்தார்

தேனி:

முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் தேக்கடியில் இருந்து பொதுப்பணித்துறை மதகை தமிழக விவசாயத்திற்கு குடிநீருக்கும் இயக்கப்படுவது வழக்கம்.

முல்லைப்பெரியார் அணையில் இருந்து 105 அடிக்கு மேல் நிரம்பி வரும் தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு செல்ல மதகு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகு தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் முதல் போக சாகுபடிக்கு இன்று காலை 10.30 மணிக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தேக்கடிக்கு வந்து மதகு முன்பு சாமி கும்பிட்டு மலர்தூவி 300 கன அடி தண்ணீர் திறந்து வைத்தார். இதில் 200 கன அடி விவசாயத்திற்கும் 100 கன அடி குடிநீருக்கும் திறக்கப்பட்டது.


இதன் மூலம் தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர், உத்தமபாளைய வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக சாகுபடி நடைபெறும். மேலும் இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடப்படும்.


Next Story