அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது


அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது
x

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், வட பெரும்பாக்கம் பகுதியில் நீர் நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் சாயிரா பேகம் என்பவர் கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த வீட்டுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையில், அந்த நிலத்தை அண்ணாமலை என்பவர் வாங்கியுள்ளார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலை தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

எதற்கு ஊதியம்?

அப்போது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ''தமிழ்நாட்டுக்கு இயற்கை கொடையாக அளித்த ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உள்ள அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும், அலட்சியமும் தான் இதற்கு காரணம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுகிறது. அப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அரசிடம் இருந்து எதற்காக ஊதியம் பெறுகின்றனர்?'' என்று கேள்வி எழுப்பினர்.

நாடு முழுவதும் லஞ்சம்

இதையடுத்து இந்த மேல்முறையீடு வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதேபோல மற்றொரு வழக்கில் அதிகாரிகள் தங்கள் பணியை செய்வதில் குறைபாடு இருந்தால் அதற்கு காரணம் அரசு தான். பொதுமக்களுக்காக எந்த அதிகாரிகளும் தங்கள் பணியை செய்வதில்லை என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

ஊழலில் சிக்காமலும் சில அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியையும் செய்வதில்லை. இதுபோன்ற நிலை தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ளது என்றும் நீதிபதிகள் வேதனையுடன் கருத்து தெரிவித்தனர்,


Next Story