'தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து நாங்கள் பேசவில்லை' - நிர்மலா சீதாராமன்


தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து நாங்கள் பேசவில்லை - நிர்மலா சீதாராமன்
x

ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் கச்சத்தீவு குறித்து பேசுகிறோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகாலமாக இதுகுறித்து பேசாமல் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பேசி வருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த நிலையில், 'தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து நாங்கள் பேசவில்லை' என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

"கச்சத்தீவு குறித்து காங்கிரஸ், தி.மு.க. 50 ஆண்டுகளாக உண்மைக்கு புறம்பான பிரசாரத்தை செய்து வருகின்றன. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் அப்போதும் கூட்டணியில் இருந்தன, இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன. தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து நாங்கள் பேசவில்லை. ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் பேசுகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Next Story