'எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சியடையும்படி பணிபுரிந்து வருகிறோம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சியடையும்படி பணிபுரிந்து வருகிறோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

‘எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சியடையும்படி பணிபுரிந்து வருகிறோம்’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறியதாவது;-

"என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்ச்சி பெறுகிறேன். சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபோது, எங்களுக்காக வாக்களித்த மக்கள் சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லும் வகையில் பணியாற்றுவோம் என்று கூறியிருந்தேன்.

அதே போல், எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்கள் பணி அமையும் என்று நான் தெரிவித்தேன். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியுமா என பலர் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை மிக மோசமாக இருந்ததால், எனக்கே சிறிது அச்சம் ஏற்பட்டது. ஆனால் நிதிநிலையை சரிசெய்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நிறைவேற்றினோம்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story