ரூ.88¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ரூ.88¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

விருதுநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.88.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார்.

விருதுநகர்

விருதுநகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இன்று காலை 9.30 மணி அளவில் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

இதைதொடர்ந்து மருத்துவக்கல்லூரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட முன்னோடிகள் 2,000 பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.மதியம் 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நூலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள போட்டி தேர்விற்கான படிப்பகத்தை திறந்து வைக்கிறார்.

இதையடுத்து மருத்துவக்கல்லூரி கலையரங்கில் ரூ.88.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 487 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.38.25 கோடி நிதி உதவியும், மாவட்ட தொழில் மையம் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ. 49.29 கோடி கடனுதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 54 பேருக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

தாட்கோ மூலம் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை உரையாற்றுகிறார். சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரோஷ் அகமது முன்னிலை உரையாற்றுகிறார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார். சாத்தூர் ஆர்.டி.ஓ. சிவக்குமார் நன்றி கூறுகிறார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். அதன் பின்னர் நெல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்ட அரங்கின் முன்பு கோட்டை போல் பிரமாண்ட முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story