ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?


ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என பயணிகள் குமுறுகின்றனர்.

விருதுநகர்

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்களை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

தட்கல், பிரீமியம் தட்கல்

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது. வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.

தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும்.

ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.

விளக்கம் இல்லை

தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப்பகுதிகள் இருக்கும்.

உதாரணமாக 100 டிக்கெட்கள் அதில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். பலர் தட்கல் விருப்பப்பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் சாதரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும் அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்களும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும். இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை. சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

3 மடங்கு கட்டணம்

விருதுநகர் பாலகணபதி:- நான் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில் அவ்வப்போது நிறுவனத்திற்கு செல்வதற்கு ெரயிலில் வழக்கமான முன்பதிவு தட்கல் டிக்கெட் இல்லாத நிலையில் பிாீமியம் தட்கல் டிக்கெட் பெற வேண்டிய நிலை உள்ளது. இல்லையேல் விமானத்தை நாடி செல்ல வேண்டி உள்ளது. விமானத்தில் தான் உடனடி டிக்கெட் எடுப்பதற்கு 3 மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நிலையினை தற்போது ெரயில்வே துறையும் கொண்டு வந்து விட்டது. ஆனாலும் விமான கட்டணத்தை ஒப்பிடும்போது ெரயில்வே கட்டணம் குறைவாக இருந்தாலும் எல்லோராலும் அதை ஏற்பது என்பது இயலாது. ஆனாலும் தேவையுள்ளோர் பிரீமியம் தட்கல் நடைமுறையை ஏற்றுக்கொள்ளலாம்.

சீனிவாசன்:- ெரயில்வே துறை பயணிகள் ெரயில் சிறப்பு கட்டணத்தை உயர்த்தி விட்டது. அனைத்து கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்றால் கூடுதல் ெரயில்களை இயக்க சாத்தியமில்லாமல் போய்விடும். எனவே முன்பதிவு நடைமுறையில் தட்கல் நடைமுறையை மட்டும் ெரயில்வே துறை வைத்துக்கொண்டு பிரீமியம் தட்கல் முறையை ரத்து செய்துவிடலாம். ஏனெனில் பிரீமியம் தட்கல் முறையில் கட்டண உயர்வு என்பது அசாதாரணமான நிலையில் உள்ளது. இது நடுத்தர சாமானிய மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளது. இந்த மாதிரியான நடைமுறைகள் தவிர்க்க வேண்டும்.

வசதிகள் இல்லை

ெரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா:-

கொரோனா பாதிப்புக்கு பின்பு ரத்து செய்யப்பட்ட அனைத்து ெரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுத்து உள்ள ெரயில்வே துறை பயணங்களை சிறப்புெரயில்களாக மாற்றி 30 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகிறது. அதேநிலையில் வழக்கமான முன்பதிவு டிக்கெட் முடிந்து விட்ட நிலையில் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறது. பிரீமியம் தட்கல் முறையில் தொடக்கத்தில் கட்டணம் இருப்பதை விட முடிவில் 3 மடங்கு கட்டணம் உயர்ந்து விடுகிறது. ஆனால் ெரயிலில் பயணம் செய்யும்போது 3 மடங்கு கட்டணம் செலுத்தி பயணம் செய்பவருக்கு சிறப்பான வசதிகள் ஏதும் செய்து கொடுப்பதில்லை. அருகருகே பயணம் செய்யும் நிலையே உள்ளது. எனவே ெரயில்வே துறை குறிப்பிட்ட ஒரு கட்டண உயர்வுடன் பிரீமியம் தட்கலுக்கும் நிலையான ஒரு கட்டணத்தை நிர்ணயிக்கலாம். முதலில் பதிவு செய்பவருக்கும், முடிவில் பதிவு செய்பவருக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட்டால் பாரபட்சம் இல்லாமல் போய்விடும். எனவே ெரயில்வே துறை இதை பரிசீலிக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ெரயில்வே அலுவலர் சிவகுருநாதன்:- ெரயில்வே துறை பொதுத்துறை நிறுவனமாக மக்கள் சேவையை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டது. இத்துறையுடன் அஞ்சல் துறை, நிலக்கரித்துறை, கனரகத்துறை, துறைமுகத்துறை உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன. ஆனால் மத்திய அரசில் நீண்ட காலமாகவே ெரயில்வே துறையின் மக்கள் சேவை நோக்கை மாற்றி வணிக நோக்கில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இதனால்தான் பயணிகள் முன்பதிவில் கூட தற்கால நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. பிரீமியம் தட்கல் நடைமுறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலருக்கு கூட குறிப்பிட்ட ெரயிலில் எத்தனை சதவீதம் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியாது. அவர் தொடக்கத்தில் என்ன கட்டணத்தை கணினி காட்டுகிறதோ அந்த கட்டணத்தை வசூலிப்பார். நடைமுறை முடியும் பொழுது என்ன கட்டணத்தை கணினி காட்டுகிறதோ அதை வசூலிப்பார். ஆனால் தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையில் 100 சதவீதத்திற்கு கட்டணம் மாறுபடும் நிலை உள்ளது. விமான கட்டண நடைமுறை என்பது பொருளாதார ரீதியில் வசதியானவர்களுக்கான நடைமுறையாகும். ஆனால் ெரயில் சேவை என்பது சாதாரண நடுத்தர மக்களின் பயணத்தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படி உச்சகட்ட கட்டணம் வசூலிப்பது என்பது ஏற்புடையதல்ல. இதனை தவிர்க்க வேண்டும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை

தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் கூறியதாவது:-

திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பின் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்கள் பொதுமக்களுக்கு மிகவும் கிடைக்கின்றன.

நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும் போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story