சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை? ஐகோர்ட்டு கேள்வி


சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை? ஐகோர்ட்டு  கேள்வி
x

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் வி.டி.பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரிவித்ததுடன், அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தற்போது தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், கவர்னர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், இதுசம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story