விளையாடி கொண்டிருந்தபோது கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலி: உத்தமபாளையம் அருகே பரிதாபம்


விளையாடி கொண்டிருந்தபோது  கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலி:  உத்தமபாளையம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:45 PM GMT)

உத்தமபாளையம் அருகே விளையாடி கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.

தேனி

கழிவுநீர் தொட்டி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதா ஸ்ரீ (வயது 7). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாா். அதே ஊரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் சுப ஸ்ரீ (6). ஜெகதீசன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் தனது மனைவியுடன் தங்கியிருந்து ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். சுப ஸ்ரீ பண்ணைப்புரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவரும் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று மாலை சுப ஸ்ரீ, நிகிதா ஸ்ரீ ஆகிய இருவரும் அங்குள்ள 7-வது வார்டில் உள்ள பெண்கள் கழிப்பறை அருகே வேப்பமரத்திற்கு கீழே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருேக அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்) மீதும் ஏறி விளையாடினர். இதில் கழிவுநீர் தொட்டியின் மூடி பழுதாகி இருந்ததால் அதன் மீது மிதித்ததில் மூடி உடைந்து எதிர்பாராதவிதமாக மாணவிகள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர்.

மாணவிகள் பலி

இதை அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவா்கள் பாா்த்து பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இளைஞா்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவிகளை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2 மாணவிகளும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மாணவிகளின் உடலை பாா்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே கழிவுநீர் தொட்டியை சீரமைக்காததால் மாணவிகள் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் பண்ணைப்புரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 மாணவிகள் பலியான சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story