எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM (Updated: 14 Oct 2023 6:45 PM)
t-max-icont-min-icon

எழுத்துத்தேர்வு ரத்தான நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 படித்து வரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 'யாசஸ்வி' (YASASVI) என்ற நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த மாதம் 29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடப்பதாக இருந்தது. இந்த தேர்வு காலம் பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 8-ம் மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை https://scholarships.gov.in என்ற மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story