அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார்? - ஐகோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு


அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார்? - ஐகோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு
x

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார் என்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

சென்னை,

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை, வேலூர் கோர்ட்டு விசாரித்து அவரையும் அவரது மனைவியையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா, "விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றியது தொடர்பாக ஐகோர்ட்டு நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால், வழக்கில் ஐகோர்ட்டு பதிவுத் துறையை சேர்த்திருக்க வேண்டும். மேலும், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தான் வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் முன் வைத்த வாதத்தையே வலியுறுத்தினார். மேலும் அவர், "வேலூர் கோர்ட்டுக்கு மாற்றிய ஐகோர்ட்டு நிர்வாக முடிவுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை" என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து எடுத்த இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுப்பதாகக் கூறி, விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story