தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை


தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை
x

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறைச்செயலாளர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. தேர்வுக்காக பணி மூப்பு அடிப்படையில் டி.ஜி.பி அந்தஸ்தில் 13 அதிகாரிகள் உள்ளனர்.

இதில் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சய் அரோரா, பிரஜ்கிஷோர் ரவி, ஷங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால், அமரேஷ் புஜாரி, ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்டியலை ஆய்வு செய்து, தகுதியான நபர்களை யு.பி.எஸ்.சி தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும்.

அந்த அந்த பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக அரசு காவல்துறை சட்ட ஒழுங்கு புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கும்.அந்த வகையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நியமன டி.ஜி.பி யார் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story