கோடநாடு கொலை வழக்கு: சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? நீதிபதி கேள்வி


கோடநாடு கொலை வழக்கு:  சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது?  நீதிபதி கேள்வி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:43 PM GMT (Updated: 23 Jun 2023 2:38 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது.

முதலாவதாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த வழக்கை பொறுத்தவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேர் தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து, தனிப்படை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையான தனிப்படையினர், சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையை ஊட்டி மாவட்ட செசன்ஷ் கோர்ட்டு நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையே இந்த வழக்கு விசாரணை இன்று ஊட்டி ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினார். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் சூப்பிரண்டு முருகவேல், துணை சூப்பிரண்டுகள் சந்திரசேகர், அண்ணாதுரை, உள்ளிட்ட போலீசார் ஆஜராகினர். குற்றவாளிகள் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர்.

இதற்கிடையே சிபிசிஐடி போலீசாரின் இடைக்கால விசாரணை அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அடுத்த மாதம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வக்கீல் விஜயன், கோடநாடு கொலை சம்பவம் நடந்த இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல் வாளையார் மானோஜ் குடும்பத்தினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வக்கீல் முனியசாமி வாதிட்டார்.

அப்போது இதுவரை குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தினர் துன்புறுத்தப்படவில்லை என்றும் இனி மேலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முடிவில் சாட்சிகள் சம்பந்தமாக புலன் விசாரணை மேற்கொள்ள வெளி மாநிலம் செல்லவும் தொழில்நுட்ப விஷயங்களுக்காகவும் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை ஜுலை 28-ந் தேதி தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

முன்னதாக மாவட்ட நீதிபதியாக அப்துல் காதர் சமீபத்தில் பொறுப்பேற்ற கொண்ட பின்னர் முதல் முறையாக அவர் கோடநாடு வழக்கு விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story