கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

கடலூர்

வெப்பச்சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது பகலில் வெயிலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையில் வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்த நிலையில், இரவு 9 மணிக்கு பிறகு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் பலத்த காற்று வீசியது. அதன்பிறகு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை விட்டு, விட்டு அதிகாலை 2 மணி வரை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. அதன்பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலைநகர், வேப்பூர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், லால்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.



Next Story