முத்துப்பேட்டை, திருமக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை


முத்துப்பேட்டை, திருமக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 10:32 AM GMT)

முத்துப்பேட்டை, திருமக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

திருவாரூர்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டதையொட்டி முத்துப்பேட்டை பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். ஆனால் கல்லணையிலிருந்து கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வராத நிலையில் நேரடி நெல் விதைப்பில் முளைத்த பயிர்கள் கருகும் சூழ்நிலை இருந்தது. இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை பகுதியில் 1 மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையினால் உதய மார்த்தாண்டபுரம், தில்லைவிளாகம் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதேபோல் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, கோரையாறு, சித்தனங்குடி, பூந்தாழங்குடி, கார்நாதன்கோவில், அரிவளூர், கீழமணலி, வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், நாகங்குடி, பழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது.


Next Story