தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை


தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை
x

செய்யாறு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

காதல் திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரஞ்சித் (வயது 27), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரின் மகள் கவுசல்யாவும் (23) காதலித்து வந்தனர். கடந்த 2 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கவுசல்யா செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரது நடத்தையில் ரஞ்சித்துக்கு சந்தேகம் ஏற்பட்டுவந்தது. குடிபோதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் அளத்தார். அதன் பேரில் போலீசார் ரஞ்சித்தை அழைத்து எச்சரித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.

கழுத்தை இறுக்கினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரஞ்சித் அவர் கட்டிய தாலியால் மனைவி கவுசல்யாவின் கழுத்தில் இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் கவுசல்யா பேச்சு மூச்சற்ற நிலையில் கீழே விழுந்தார்.

அதன்பின் தனது ஒரு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் விரைந்து பார்த்தபோது கவுசல்யா இறந்து கிடந்தார்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.


Next Story