பைக் மோதியதில் காட்டெருமை பலி; வேடிக்கை பார்க்க சென்ற பால்காரர் ஆட்டோ மோதி காயம்..!


பைக் மோதியதில் காட்டெருமை பலி; வேடிக்கை பார்க்க சென்ற பால்காரர் ஆட்டோ மோதி காயம்..!
x

திண்டுக்கல் அருகே பைக் மோதி காட்டெருமை கன்று பலியானது, மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட செந்துறை-அடைக்கனூர் பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளது. அடிக்கடி இந்த பகுதியில் விவசாய பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மாமரத்து பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 25) என்பவர் தனது பைக்கில் அதிகாலை மதுரை பூ மார்க்கெட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தார். அப்போது கோடாங்கிகுட்டு பகுதியில் காட்டெருமை கன்று ஒன்று சாலையை கடக்க முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக சிவக்குமார் ஓட்டி வந்த பைக் மோதியதில் காட்டெருமை கன்று இறந்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டெருமை கன்றை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

மேலும் இறந்த காட்டெருமையை வேடிக்கை பார்க்க சென்ற தட்டாமடைபட்டியை சேர்ந்த பால்காரர் பொன்னுமுத்து மீது நத்தம் சேர்வீடு-செந்துறை நோக்கி சென்ற ஆட்டோ மோதியதில் காயமடைந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Next Story