வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்


வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:45 PM GMT (Updated: 18 Jun 2023 7:45 PM GMT)

அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் வாழைகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

கோயம்புத்தூர்

வால்பாறை

அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் வாழைகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

காட்டுயானைகள்

வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் கூட்டங்கள், கேரள மாநிலத்தில் உள்ள சாலக்குடி வனப்பகுதிகளுக்கு சென்று விட்டன. தற்போது வால்பாறை வனப்பகுதியிலும், எஸ்டேட் பகுதிகளை ஒட்டிய சிறு வனச்சோலைகளிலும் சில காட்டுயானைகள் மட்டுமே சுற்றித்திரிந்து வருகிறது. அவை குறிப்பாக கேரள வனப்பகுதியை ஒட்டிய அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 யானைகள் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தொழிலாளர்களின் வீடுகளில் வளர்த்திருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

வாழை மரங்கள்

ஆனால் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் எந்தவித சேதங்களையும் ஏற்படுத்தாமல், வாழை மரங்களை மட்டுமே தின்று விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. எனினும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வாழை மரங்களை வளர்க்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

ஆனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், குடியிருப்பு பகுதிகளில் வாழை மரங்களை வளர்ப்பதனால் காட்டுயானைகள் வீடுகளை சேதப்படுத்தாமல் வாழை மரங்களை தின்றுவிட்டு செல்கின்றன என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.


Next Story