ஆசனூர் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் விடிய, விடிய அட்டகாசம்; 1 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்


ஆசனூர் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் விடிய, விடிய அட்டகாசம்; 1 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்
x

ஆசனூர் அருகே தோட்டத்தில் புகுந்து விடிய, விடிய அட்டகாசம் செய்த காட்டு யானைகள் 1 ஏக்கர் கரும்பு பயிரை சேதப்படுத்தியது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே தோட்டத்தில் புகுந்து விடிய, விடிய அட்டகாசம் செய்த காட்டு யானைகள் 1 ஏக்கர் கரும்பு பயிரை சேதப்படுத்தியது.

காட்டு யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளன. இதில் யானைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

ஆசனூர் வனச்சரகத்தில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள ஓங்கல்வாடி, அரேபாளையம் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த வாரம் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கரும்பு பயிர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின. பின்னர் அவை ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவரின் 3 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தன. அதன்பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட தொடங்கியது. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சீனிவாசன் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது யானைகள் கரும்பு பயிரை துதிக்கையால் முறித்து தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி கொண்டிருந்தன. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

1 ஏக்கர் நாசம்

உடனே இது குறித்து அவர் அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு திரண்டனர். பின்னர் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து செல்ல மறுத்தது. ஆவேசமடைந்து விவசாயிகளை துரத்தியது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

அதன்பின்னர் யானைகள் அட்டகாசத்தை தொடர்ந்தது. விடிய, விடிய தோட்டத்தில் நின்று கரும்பு பயிரை தின்று விட்டு நேற்று அதிகாலை காட்டுக்குள் சென்றது. யானைகளால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதமானது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் ஊருக்கு புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story