விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா?


விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா?
x

மண்மங்கலத்தில் விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

போக்குவரத்து நெரிசல்

கரூர் மாநகரில் டெக்ஸ்டைல், கொசுவலை, பஸ்கூண்டு கட்டும் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் கரூர் மாநகருக்கு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.

கரூர் மாநகரம் குறுகிய பகுதியாக இருந்தாலும் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகிறது.

அடிக்கடி விபத்து

இதனால் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாள் கோவில் பிரிவு, திருச்சி சாலை கோடங்கிபட்டி, வீரராக்கியம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, பெரிச்சிபாளையம், செம்படை, தவிட்டுப்பாளையம் ஆகிய பிரிவு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனால் விபத்துகளை தடுக்க மேம்பாலம் கட்ட வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு பெரிய ஆண்டாங்கோவில், பெரிச்சிபாளையம் பிரிவு பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செம்மடை பிரிவில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பு

மண்மங்கலத்தை சுற்றியுள்ள காளிபாளையம், வள்ளிப்பாளையம், சேங்கல்மலை, மூர்த்திபாளையம், கடம்பங்குறிச்சி, செவ்வந்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து கரூர் மாநகருக்கு வரும் வாகன ஓட்டிகள் மண்மங்கலம் பிரிவு சாலைக்கு வந்து தான் கரூர் மாநகருக்குள் வரவேண்டும். இதனால் மண்மங்கலம் பிரிவில் உள்ள மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மண்மங்கலம் பிரிவு பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story