முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்காவது மதுக்கடைகளை மூடுமா? சீமான் கேள்வி


முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்காவது மதுக்கடைகளை மூடுமா? சீமான் கேள்வி
x

புனித வெள்ளிக்கு மதுக்கடைகளை மூடாத தி.மு.க. அரசு முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்காவது மதுக்கடைகளை மூடுமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கிறிஸ்துவ மக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மையாக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

முஸ்லிம் மக்கள் நீர் கூட அருந்தாமல் இறைவனை எண்ணி 30 நாட்கள் நோன்பிருந்து கொண்டாடும் ஈகைப் பெருநாளான ரம்ஜான் அன்றாவது தி.மு.க. அரசு மதுக்கடைகளை மூடப்போகிறதா? அல்லது அன்றும் திறந்து வைக்குமா? இதுதான் தி.மு.க. அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மை கொள்கையா? என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, தி.மு.க. அரசு இனிவரும் காலங்களிலாவது கிறிஸ்தவ மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்றும், முஸ்லிம் மக்கள் கொண்டாடும் ரம்ஜான் பெருநாளன்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story