கணவரை பயமுறுத்த உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் கருகி சாவு


கணவரை பயமுறுத்த உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் கருகி சாவு
x

சாத்தூர் அருகே கணவரை பயமுறுத்த உடலில் ெபட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் உள்ள நடுச்சூரங்குடியை சேர்ந்த பட்டதாரி பெண் ஜெயக்கொடி (வயது30). இவரும் ஞானகுரு என்பவரும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கலையரசன் என்ற மகனும், காருண்யா என்ற மகளும் உள்ளனர்.

ஜெயக்கொடி வீட்டில் இருந்தபடியே கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். ஞானகுருவுக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று கணவரை பயமுறுத்த வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக கூறி இருக்கிறார். அப்போது, தீப்பற்ற வைத்ததில் எதிர்பாராதவிதமாக ஜெயக்கொடி உடலில் தீப்பிடித்து உடல் கருகி பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜெயக்கொடியின் தந்தை ஆரோக்கியராஜ் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story