கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். இங்கு வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பழனி என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

தமிழ்ச்செல்வியின் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும் தமிழ்ச்செல்வி அடிக்கடி தலைவலியால் துடிதுடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொடர் தலைவலியால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக கடந்த 15-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து அவர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story