சோழவரம் பஜாரில் வேன் சக்கரத்தில் சிக்கி பெண் பலி


சோழவரம் பஜாரில் வேன் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x

சோழவரம் பஜாரில் வேன் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சோழவரம் புது நகரில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 45). இவரது மனைவி கன்னிகேஸ்வரி (42). இவர் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் முருகேசன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் உறவினர் மோனிகா (7) ஆகியோரை அழைத்து கொண்டு வீட்டுக்கு சோழவரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். சோழவரம் பஜாரில் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த பால் வேன் மோதியது.

கன்னிகேஸ்வரி கீழே விழுந்த நிலையில் அவர் மீது வேன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கன்னிகேஸ்வரி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முருகேசன் குழந்தை மோனிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் கன்னிகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பால் வேனை ஓட்டி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்குமார்ஷா (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story