பொதட்டூர்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலி - டிரைவருக்கு வலைவீச்சு


பொதட்டூர்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலி - டிரைவருக்கு வலைவீச்சு
x

பொதட்டூர்பேட்டை அருகே டிப்பர் லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 62). இவரது மனைவி ராணி (53). இவர் நேற்று காலை காந்தி நகரில் இருந்து பள்ளிப்பட்டு- சோளிங்கர் செல்லும் பிரதான சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிப்பட்டு தாலுகா வடகுப்பம் என்ற இடத்தில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று அந்த பகுதியில் அதிவேகமாக சென்றது. இதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராணி மீது டிப்பர் லாரி மோதியது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடினார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ராணியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து ராணியின் மகன் சுரேஷ்குமார் (28) பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story