கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் மரத்தில் மோதியதில் பெண் பலி


கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் மரத்தில் மோதியதில் பெண் பலி
x

ஶ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பலியான நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி:

பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் இசக்கி பைனாஸ் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கல்யாணி (வயது 43). இவர்களுக்கு மகன் இம்மானுவேல் பிரபு, மகள் ரம்யா உள்ளனர். இவர்களது சொந்த ஊர் நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரம் ஆகும். தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திசையன்விளையில் அவர்களது நண்பரின் கோவில் கொடைவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 2 மணியளவில் கோவிலிலிருந்து புறப்பட்டு அவர்களது காரில் கே.டி.சி நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 3 மணியளவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள தூதுகுழி வளைவு சாலையில் கார் செல்லும் போது எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே இசக்கி மனைவி கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயத்துடன் இசக்கி, மகன் இமானுவேல்பிரபு, மகள் ரம்யா ஆகிய மூன்று பேரும் காரிலிருந்து அலறி சத்தம் போட்டனர். நள்ளிரவு என்பதால் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செய்துங்கநல்லூர் போலீசார் கார் விபத்துக்குள்ளானதை கண்டனர். காரின் உள்ளே இறந்த நிலையில் இருந்த கல்யாணியின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்ட போலீசார் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story