கிரிப்டோ கரன்சியில் பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசில் புகார்


கிரிப்டோ கரன்சியில் பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசில் புகார்
x
தினத்தந்தி 6 Sep 2023 7:15 PM GMT (Updated: 6 Sep 2023 7:20 PM GMT)

கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சிவகங்கை


கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பணம் முதலீடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குடிகாத்தான்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 28). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று வந்திருந்தது.

இதை நம்பி அவர் அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ள காலகட்டத்தில் 103 முறை ரூ.13 லட்சத்து 87 ஆயிரத்து 372-ஐ செலுத்தினாராம். அதன் பின்னர் அவரால் பணம் வாங்கியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

விசாரணை

இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கலைச்செல்வி இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் தேவி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள வங்கி கணக்குகளில் கலைச்செல்வி பணம் செலுத்தியது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story