100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பெண்


100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பெண்
x

குமரியில் முன்பணம் செலுத்தினால் கடன் பெற்று தருவதாக 100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்தாக பெண் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் முன்பணம் செலுத்தினால் கடன் பெற்று தருவதாக 100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்தாக பெண் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் மனு

குமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அங்கு இயங்கி வரும் சங்கம் மூலமாக கடன் தருவதாக ஒரு பெண் எங்களிடம் கூறினார். ரூ. 30 ஆயிரம் முன் பணம் செலுத்தினால் ரூ.3 லட்சம் கடன் கிடைக்கும் என்றும், அதில் பாதி பணம் தள்ளுபடி ஆகும் என்றும் அந்த பெண் கூறினார். மேலும் அந்த பெண்ணின் கணவர் காவல்துறையில் பணியாற்றி இறந்து விட்டதாகவும் கூறினார்.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் அந்த பெண் கூறியதை நம்பி குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் சுமார் ரூ. 60 லட்சம் வரை பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பெண் பல முறை நேரில் வந்து வாங்கி சென்றார். மேலும் நெல்லை மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட சங்க அலுவலகத்தில் வைத்தும் பணம் வாங்கினார்.

ஆனால் முன்பணம் செலுத்தியவர்களுக்கு கடன் தொைக கெடுக்காததால் நாங்கள் கேட்டோம். அப்போது டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்று கூறி வந்தார். பின்னர் கொரோனா முடிந்து கடந்த ஒரு ஆண்டாக சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகியை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து நேரில் சென்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் பணமே வாங்காதது போல் எங்களிடம் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story