சபாநாயகர் பங்கேற்ற விழாவில் தீக்குளிக்க முயன்ற பெண்: கந்து வட்டி கேட்டு கொடுமைபடுத்துவதாக புகார்


சபாநாயகர் பங்கேற்ற விழாவில் தீக்குளிக்க முயன்ற பெண்: கந்து வட்டி கேட்டு கொடுமைபடுத்துவதாக புகார்
x

சபாநாயகர் பங்கேற்ற விழாவில் ஒரு பெண் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

நெல்லை,

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இருந்து வந்த ஒரு பெண் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர் அந்த கேனை பிடுங்கினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தப்பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் நடத்திய விசாரணையில், அந்தப்பெண் பாளை மனக்கவாவலம்பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.

இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எனவேதான் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story