குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

செங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை

செங்குன்றம்,

செங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து பம்மதுகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு குடிநீர் வழங்க கோரி செங்குன்றம்-ஆவடி நெடுஞ்சாலையில் ஈஸ்வரன் நகர் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதியளித்ததன்பேரில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் செங்குன்றம்-ஆவடி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story