ரூ.70 ஆயிரம் கடனை கேட்டு வீட்டுக்கு பூட்டு போட்டதால் தொழிலாளி தற்கொலை


ரூ.70 ஆயிரம் கடனை கேட்டு வீட்டுக்கு பூட்டு போட்டதால் தொழிலாளி தற்கொலை
x

ரூ.70 ஆயிரம் கடனை கேட்டு வீட்டுக்கு பூட்டு போட்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வந்தவர் சியாம் சுந்தர் (வயது 27). இவர், எழும்பூரில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சியாம் சுந்தர், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பவரிடம் குடும்ப செலவுக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. சியாம் சுந்தரிடம் தான் கொடுத்த கடனை திரும்பக்கேட்டு அஸ்கர்அலி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுத்த கடனை கேட்பதற்காக சியாம் சுந்தர் வீட்டுக்கு அஸ்கர் அலி சென்றார். அப்போது வீட்டின் கதவு மூடப்பட்டு அதில் பூட்டு ெதாங்கியது. உடனே அஸ்கர் அலி, தன்னிடம் இருந்த மேலும் ஒரு பூட்டால், சியாம் சுந்தர் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

வெளியே சென்றிருந்த மீனாட்சி, தனது மகள்களுடன் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவில் 2 பூட்டுகள் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கணவரை தேடி எழும்பூர் சென்றார். அங்கும் அவர் இல்லாததால் அஸ்கர் அலி வீட்டுக்கு சென்று குழந்தைகளை வைத்துக்கொண்டு வெளியே தங்க முடியாது. பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து சாவியை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.

பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டிய வீட்டுக்குள் தனது கணவர் சியாம் சுந்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், தூக்கில் தொங்கிய சியாம் சுந்தர் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர்.

அதில், தனது வீட்டில் 2 பூட்டுகள் தொங்குவதை கண்ட சியாம் சுந்தர் இதுபற்றி அஸ்கர் அலியிடம் கேட்டார். பின்னர் சாவியை தரும்படி கேட்டார். ஆனால் அஸ்கர் அலி மறுத்துவிட்டதால் விரக்தி அடைந்த சியாம் சுந்தர், தனது வீட்டின் பால்கனி வழியாக ஏறிகுதித்து பூட்டி இருந்த வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அஸ்கர் அலி பேசின் பிரிட்ஜ் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story