மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது தொழிலாளி சாவு


மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

தியாகதுருகம் அருகே மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வேப்பூர் தொழிலாளி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி. இவருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பெரியசாமி(40), மணிகண்டன் (41), அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோரை ராஜகுருநாதன் தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வேலை முடிந்ததும் அனைவரும் மது அருந்தினர்.

தொழிலாளி சாவு

இதனை தொடர்ந்து ராஜகுருநாதனின் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து சென்று அருகில் உள்ள மயூரா ஆற்றில் பாய்ச்சி 5 பேரும் மீன்பிடித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பெரியசாமி கீழே கிடந்த கல்லில் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து ராஜகுருநாதன், மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் வீச்சு

முதலில் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அவர்கள், பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்து விட்டு சென்றனர். பின்னர் நள்ளிரவில் ராஜகுருநாதனும், மணிகண்டனும் மோட்டார் சைக்கிளில் மயூரா ஆற்றுக்கு சென்றனர். அங்கு முட்புதரில் மறைத்து வைத்திருந்த பெரியசாமியின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து, அசகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வீசிவிட்டு சென்றனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று காலை இறந்து கிடந்த பெரியசாமியின் உடலை பார்த்த கிராம மக்கள், வரஞ்சரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜகுருநாதன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story