வெந்நீர் கொட்டியதில் தொழிலாளி படுகாயம்


வெந்நீர் கொட்டியதில் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 4 Oct 2023 9:00 PM GMT (Updated: 4 Oct 2023 9:01 PM GMT)

பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் வெந்நீர் கொட்டியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் வெளிப்பிரகாரத்தில் சமையல் அறையுடன் கூடிய அன்னதான கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 43) என்பவரும் அன்னதான கூடத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி வழக்கம்போல் அன்னதான கூடத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது வெந்நீர் கொட்டியது. இதில் அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறிதுடித்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு கோவிலில் உள்ள சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு பழனிசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பழனி கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story