அக்காள்-தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை


அக்காள்-தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 2 Jun 2022 4:05 PM GMT (Updated: 2 Jun 2022 4:13 PM GMT)

அக்காள்-தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

அக்காள்-தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போச்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா குப்பம் கிராமம் கொள்ளைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 49), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த சிறுமியின் தங்கையிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட முயன்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த சிறுமிகளின் தாய் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பூபாலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

14 ஆண்டு சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், பூபலானுக்கு போச்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்கு 2 ஆண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் அரசு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து பூபாலன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story