உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 5 Jun 2023 7:21 PM GMT (Updated: 6 Jun 2023 2:39 AM GMT)

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தினர், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத பெரம்பலூரை உருவாக்குவது, பிளாஸ்டிக் பைகள்-பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழல் அமையும் வகையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது தலையாய கடமை என்று தெரிவித்தார்.

இந்தநிகழ்ச்சியில் கிறிஸ்டியன் கல்விக்குழும செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர், கல்வியியல் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு மூலிகை தாவரம்-மரக்கன்றுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி, பாலக்கரை ரவுண்டானா வரை நடந்தது.


Next Story